இரசிகை-இரசித்தவை

Wednesday, December 05, 2007

இரண்டடிக்குள் இரண்டரை கோடி!

நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...

ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த
அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...

பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?

அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்... இருந்தும்
மனம் ஏங்கியது...........

அடடா....
அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!

அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை??
வாழ தெரியவில்லை?? ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..
செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!

இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!