இரசிகை-இரசித்தவை

Thursday, May 17, 2007

நன்றி கெட்ட நான்..!
================

கண் மூடியபடி நான் பிறந்தேன்..
அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம்
காவு கொள்ள விடாதிருந்து
எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு
கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..

நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு தனை விழுத்தி
தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில்
தன் உயிர் மூச்சை ஒளித்து வைத்தாள் -அம்மா

வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில்
காவி காவியே தான் மெலிந்தாள்.

கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை பேச பழக்கினாள்!

காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..
பிள்ளை சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம் சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்" எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ?
பயந்தவள் மனசை இரை கவ்விய
பாம்பாய் கொன்றேன்!

ஓடி வாடி..ஓடி வாடி....
அம்மா உலகத்தை மறந்து..
என்னுள் மீண்டும் பிறந்து..
நடை பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள்
என்னை நடக்கவைத்தாள்.. எங்கே...
நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!

வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு
நெய்த கறுப்பு துணி என்றாகிறது!

"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா
கடைக்கு போட்டு வாயேன்" இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா" அது..நான்!
முழங்கால் வலிக்க..
முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!

எனக்கு நடை பழக்கியவளை..
பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!

எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது ..நான்!
எப்படிச் சொல்ல?

இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!

காலம் ஓடும் ...
அம்மா ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான் அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா? கண்ணீருக்குள்ளும் சுயநலம்..
சீ..
நன்றி கெட்ட நான்!!

2 Comments:

  • At Monday, May 28, 2007, Blogger U.P.Tharsan said…

    நல்ல கவி, பாசம் புகட்டும்

    //அம்மா ஒருபொழுதில் காலமாவாள்..
    கதறி அழுவேன் ..நான் அம்மா போயிட்டாளே என்றா?
    இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா? கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. //

    ம்..... :-((

     
  • At Friday, June 01, 2007, Blogger Rasikai said…

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்சன்

     

Post a Comment

<< Home